எல்லாம் கடந்தவனா எழுத்தாளன்?

தமிழிலக்கியச் சூழலில் லட்சிய எழுத்தாளனின் மாதிரி ஒன்று உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த எழுத்தாளன் சிறுபத்திரிகையிலிருந்து வந்தவனாகவும், நுண் அரசியல் பேசக்கூடியவனாக இருக்க வேண்டும், இடதுசாரி சிந்தனை கொண்டவனாக, பெரியார், அம்பெத்கர், மார்க்ஸ், காந்தி போன்றவர்களைப் படித்தவனாக இருக்க வேண்டும், சமூக நீதியைப் பேசக் கூடியவனாக இருக்க வேண்டும், தலித்தாகவோ, தலித்துகளுக்காக குரல் கொடுப்பவனாகவும் இருக்க வேண்டும், வேறு சாதியாக இருந்தால் குற்றவுணர்ச்சி கொள்பவனாகவும், தன் சாதியினர் தலித்துகள் மீது நிகழ்த்திய வன்செயல்களுக்கு மன்னிப்பு கேட்பவனாக இருக்க வேண்டும்,  பெண்ணுரிமைப் பேசுபவனாகவும், ஆணாதிக்கத்தை கண்டிப்பவனாகவும் இருக்க வேண்டும் இப்படியாக பல லட்சணங்கள்.

இந்த அளவுகோள்களுக்குப் பொருந்தி வராதவர்கள் எப்போதுவேண்டுமானாலும் குற்றச்சாட்டுக்கு ஆளாகலாம் கண்டிக்கப் படலாம். எழுத்தாளனுக்குத்தானே இந்த தகுதி வேண்டும், வாசகனுக்கு இல்லையே. அதனால் யார் வேண்டுமானாலும் கேள்வி கேட்டு அவனை குற்றவுண்ரவு கொள்ளச் செய்யலாம். சாதி வெறியனாக, ஆணாதிக்கம் கொண்டவனாக அடையாளப்படுத்தப்படலாம்.

இந்த பதிவுக்கு காரணம் கண்மணி குணசேகரன் தொடர்பான சர்ச்சைதான் என்பது உங்களுக்கு புரிந்திருக்கும்.  காடுவெட்டி குருவுக்கு அவர் முகநூலில் எழுதிய இரங்கற்பா பலரை (என்னையும்தான்) அதிர்ச்சியடையச் செய்து கண்டனங்களை சந்தித்தார். அஞ்சலை, நெடுஞ்சாலை, வந்தாரங்குடி, நடுநாட்டு சொல்லகராதி என அவருடைய குறிப்பிடத்தக்கப் பங்களிப்புகள்  இருந்தாலும் அவரை மன்னிக்கக் கூடிய மனநிலை யாருக்கும் இல்லை.

வெளிப்படையாக அவர் தன் அடையாளத்தை முன் வைத்து பேசியதால் அவரை படித்தவர்கள் படிக்காதவர்கள், தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் என எல்லோருடைய கண்டனத்துக்கும் உள்ளானார். இது எதிர்பார்த்த எதிர்வினைதான். பாமக இன்று கையிலெடுத்திருக்கும் ஆபத்தான அரசியல் நிலைப்பாட்டின் விளைவு இது.  குரு ஒரு பாஸிஸ சக்தியாக அடையாளம் காணப்பட்டிருந்தார்.

தனது வலதுசாரி அரசியலை வெளிப்படையாக முன் வைப்பதன் மூலமும், இந்துத்துவா ஆதரவு மூலமும், விஷக் கொடுக்கை மேலே உயர்த்திக்காட்டுவதன் மூலமும் ஜெயமோகனும் இதே போன்ற வெறுப்பை, தூற்றுதலை, கண்டனங்களை சந்தித்துக்கொண்டிருக்கிறார். அவருடைய பங்களிப்புகள் இங்கே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவதில்லை.

இது நேரடி தாக்குதல் என்றால் பல எழுத்தாளர்கள் அவர்களின் சாதி தெரிந்ததன் காரணமாகவே அவர்களுடைய நடவடிக்கைகளும், எழுத்தும் சந்தேகத்துடன் பார்க்கப்பட்டு வருகின்றன. சந்தர்ப்பம் கிடைக்கும் போது அவர்கள் குற்றவாளிகளாக முன்னிறுத்தப்பட்டு வருகிறார்கள்.

‘பிள்ளைகொடுத்தால் விளை’ சிறுகதை எழுதியதற்காக சுந்தர ராமசாமி தலித்துகளுக்கு எதிரானவராக, சாதி அபிமானியாக முன்னிறுத்தப்பட்டார். அதுவரை அவர் சம்பாதித்திருந்த நற்பெயர்கள் தெருவில் வீசப்பட்டன.

ஏதோ ஒரு ஆதாயத்துக்கு ஆசைகாட்டப்பட்டு நானும் சில நண்பர்களும் ஒரு சாதிக் கட்சியின் பாசறைக்குள் சென்று, அதே வேகத்தில்  திரும்பி வந்தபோது ஆதிர்ச்சியடைந்தவர்களில் ஒருவர் மனுஷ்ய புத்திரன். ஆனால்  சல்மாவைத் தொடர்ந்து மனுஷ்ய புத்திரனும் திமுகவின் தீவிர தொண்டனாகி எனக்கு அதிர்ச்சியளித்துவிட்டார். வரும் தேர்தலில் அவர் சட்டப்பேரவை உறுப்பினராகி, அமைச்சர் பதவி பெற்றுக்கொண்டு தன் இருப்பிடத்தை தலைமைச் செயலகத்துக்கு மாற்றிக்கொண்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. அவரைப் பார்க்கப் போனால் பக்கத்து அறையில் நண்பர் இமயத்தையும் ஒருவேளை சந்திக்கலாம்.

என் லட்சிய எழுத்தாளனின் கனவுகளை தகர்த்தவர்களில் இமயமும் ஒருவர். விருதாச்சலத்தில் நடந்த ஒரு புத்தக வெளியீட்டு விழாவுக்கு அவரும் வந்திருந்தார். திமுக கரை வேட்டியுடன்  சாட்சாத் ஒரு அரசியல் தலைவர் போலவே வந்திருந்திருந்தார். இத்தனை அறிவுஜீவிகள் குழுமியிருக்கும் அவைக்குள் எந்தத் தயக்கமும் இல்லாமல் தன் திமுக அடையாளத்தோடு வர அவருக்கு என்ன துணிச்சல் வேண்டும்?  என் அதிர்ச்சியை நண்பர்களிடம் வெளிப்படுத்தினேன். அவர்கள் சொன்னார்கள் அரசுப் பள்ளி ஆசிரியரான அவர் பள்ளிக்குக் கூட இதே கெட்டப்பில்தான் போவாராம். அரசியல் செல்வாக்கு இருப்பதால் யாரும் அவரை கண்டுகொள்வதில்லையாம்.

இதைவிட அதிர்ச்சி பாட்டியாலா நீதிமன்ற வளாகத்தில் செல்பி எடுத்து முகநூலில் அவர் பகிர்ந்தகொண்ட போது ஏற்பட்டது. நாடே கவனித்துக்கொண்டிருந்த 2ஜி ஊழல் வழக்கின் தீர்ப்பு அன்று பாட்டியாலா நீதிமன்றத்தில் வாசிக்கப்பட இருந்தது. கனிமொழிக்கும் ராஜாவுக்கும் தன் ஆதரவைத் தெரிவிக்க இமயமும் தில்லி சென்றிருக்கிறார்.

திமுகவின் சாதாரணத் தொண்டன் போல உணர்ச்சிவசப்பட்ட நிலையில் ஒரு எழுத்தாளனைப் பார்த்தது உண்மையில் அதிர்ச்சியாக இருந்தது. இது இமயத்தின் உருவத்தையொத்த வேறு மனிதனோ என்றுகூட சந்தேகம் ஏற்பட்டது.

தலித் எழுத்தாளராக அறியப்படும் அவர் நியதிப்படிப் பார்த்தால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஆதரவாளராகத்தான் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதையும் தாண்டிய ஏதோ விசுவாசம் அவரை திமுகவோடு  அடையாளப்படுத்திக்கொள்ளச் செய்கிறது. அவருக்குள் இருக்கும் இந்த முரண்பாடு எழுத்துலகில் பெரிதுபடுத்தப்படாததும் ஆச்சர்யம்தான்.

இந்த அதிர்ச்சிக்கும் கண்டனங்களுக்கும் காரணம் ஒரு எழுத்தாளன் சாதியையோ வெகுசன அரசியலையோ கடந்தவனாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பால் எழுவது. அப்படி ஒரு பார்வை, கருத்தியல் இங்கே உருவாக்கப்பட்டிருக்கிறது.

ஒரு எழுத்தாளனை நுண்ணுர்வு கொண்டவனாக, நேர்மையானவனாக, எல்லோருக்கும் பொதுவான ஒரு நீதியை, வாழ்வை கனவு காண்பவனாக, உலகின் ஏதோ ஒரு மூலையில் நடக்கும் துயரச் சம்பத்துக்கும் மனம் வருந்துபவனாக, ஒரு புழுபூச்சிக்குக் கூட துன்பம் விளைவிக்காதவனாக இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பது நியாயமான ஒரு எதிர்பார்ப்புதான். அவனை பிரத்தியேகமான ஆளுமையாக பார்ப்பதில் தவறு எதுவும் இல்லை. அதே நேரத்தில் அவன் சமூகத்துக்குள் பலதளைகளால் பிணைக்கப்பட்டிருக்கிறான் என்பதும் அதிலிருந்து விடுபடும் எத்தனங்கள் கொண்டவனாக இருக்கிறான் என்பதையும் ஏற்றுக்கொள்ளவே வேண்டும். பலர் இப்படியான எத்தனங்கள் எதையும் செய்வதில்லை என்பதும் உண்மையே. கண்மணி குணசேகரனும், ஜெயமோகனும் அப்படிப்பட்டவர்களாகக் கூட இருக்கலாம்.

எதை எழுதினால் சர்ச்சைக்குள் சிக்காமல் தப்பிவிடலாம் என்ற கவனத்தோடு படைப்புகளை எழுதிவிட்டு எந்தப் பெரிய பிரச்சினையின் போதும் வாய் திறந்து எந்த கருத்தையும் கூறாமல் மெளனித்திருப்பவன்தான் நல்ல எழுத்தாளனாக இருக்க முடியுமா என்ற கேள்வியையும் நாம் கேட்டுக்கொள்ள வேண்டும்.

சமூகத்தில் மையம் கொள்ளும் பிரச்சினைகளை, முரண்பாடுகளை தன் படைப்பில் நேர்மையாக எதிர்கொள்வபன்தான் பொறுப்பான படைப்பாளியாக இருக்க முடியும். தப்பித்தல் அவனுக்கு அழகல்ல.  அப்படி எழுதப்படும் படைப்புகளை படிப்பதும் அதன் மீது ஆரோக்கியமான விவாதத்தை முன் வைப்பது மட்டுமே படைப்புச் சூழலை நல்ல திசையில் நடத்திச்செல்லும் உந்து சக்திகளாக இருக்க முடியும். ஆனால் பல நேரங்களில் ஒரு படைப்பாளியின் சாதிய அடையாளமே அவனை குழித்தோண்டி புதைக்க காரணமாகிவிடுவதுதான் துரதிஷ்டம். தங்களை தலித்துகளின், இடதுசாரி சிந்தனையாளர்களின் பிரதிதிகளாகக் காண்பித்துக்கொள்வதற்காகவே எதிரிகளை கண்டுபிடிக்கும் காரியத்தில் இறங்கிவிடுகிறார்கள்.  இந்த பலவீன உத்திகளை கையாளத் தொடங்கும் போது உண்மையான படைப்புகள் கூட மதிப்பிழந்து போவதும், நேர்மையான படைப்பாளன் கூட மனம் நொந்து போவதும் நடக்கிறது.

எதையும் சந்தேகக் கண்கொண்டு பார்ப்பதும், ஆய்வுக்கு உட்படுத்துவம் ஆவசியமே. இதில் நேர்மை இருக்க வேண்டும். முன்தீர்மானமோ உள்நோக்கமோ இருந்தால் எல்லாம் விஷமாகவிடும், நாசமாகிவிடும்.

ஆந்த்ரே தார்க்கோவஸ்கியின் ‘இவானின் குழந்தைப் பருவம்’

Ivan01

 

ஜீ. முருகன்

 

இவானின் குழந்தைப் பருவம் படத்தோடு தார்க்கோவஸ்கியின் முதல் சினிமா பருவம் நிறை வடைகிறது. திரைப்படக்கல்லூரியில் ஒளிப்பதிவு படித்தபோது அவர் சில குறும்படங்களை இயக்கி யிருக்கிறார் அதில் தி கில்லர், ஸ்ட்ரீம் ரோலர் அன்ட் வயலின் குறிப்பிடக்கூடியவை. ‘தி கில்லர்’ குறும் படம் ஹெமிங்வேயின் சிறுகதையை அடிப்படை யாகக் கொண்டு எடுக்கப்பட்டது. தனது சக மாணவர் அலேக்ஸாண்டர் கார்டனோடு சேர்ந்து இதை இயக்கியிருக்கிறார்.

அவருடைய முதல் முழுநீளப் படம் இவானின் குழந்தைப் பருவம். இது போகோமோலவ்வின் ‘இவான்’ சிறுகதையின் திரையாக்கம். இதற்கான காரணத்தை தார்க்கோவஸ்கி (காலத்தைச் செதுக்குதல் புத்தகத்தில்) கூறும்போது, இரண்டு ஆபத்தான காரியங்களுக்கு இடையிலான சம்பவங்களின் தொகுப்பாக அது இருந்தது. மேலும்  சினிமாவுக்கு மிகவும் ஏற்ற வடிவத்தைக் கொண்டிருந்தது என்கிறார்.

இப்படம் அவருக்கு இறுதித் தேர்வு. திரைப்படக் கல்லூரி மாணவனாக இருந்த அவர் சிறந்த இயக்குநராகப் பரிணாமம் பெற்றதற்கான அத்தாட்சி. இப்படத்தை இயக்கியபோது, தான் செல்லப்போகும் பாதை எது என்றோ, ஒரு கலைஞனாக தான் உணர்த்தப்போவது என்ன என்றோ அவருக்குத் தெளிவில்லாமல் இருந்தது. அதனால்தான் தெளிவான, எல்லாரும் நன்கு அறிந்த ஒரு கதையைத் தேர்ந்தெடுத்துக்கொள்கிறார். இப்போது அவருடைய பணி அதை அழகியலோடும் பொறுப்போடும் வெளிப்படுத்துவது தான். தனது பார்வையின் வழியே அதை மேலும் மெருகூட்டுகிறார். குழந்தைப் பருவ ஞாபகங்களால் தூண்டப்படும் கனவுகளின் கவிதையை இணைக்கிறார்.

இரண்டாம் உலக யுத்தம் நிறைவடையும் தருணம். ரஷ்யப் படை களுக்கும் ஜெர்மன் படைகளுக்கும் போர் உச்சத்தை எட்டியுள்ளது. ரஷ்யாவின் முன்னணிப் படையில் சேர்ந்து பணிபுரிகிறான் பனி ரெண்டு வயதேயான இவான். ஆற்றைக் கடந்து ஜெர்மன் நிலை களுக்குள் புகுந்து வேவு பார்த்துவிட்டுத் திரும்புகிறான். இது அவனுக்கு ராணுவ அதிகாரிகளுக்கு மத்தியில் பெரும் மதிப்பைப் பெற்றுத்தருகிறது. அவனை ஒரு செல்லப்பிள்ளைப் போல அவர்கள் பாவிக்கின்றனர். அவன் மீதுள்ள அக்கறையில், போரின் அழிவி லிருந்து அவனைக் காக்க ராணுவப் பள்ளிக்கு அனுப்ப விரும்பு கிறார் கர்னல். ஆனால் அவன் பிடிவாதமாக மறுத்துவிடுகிறான். அவனுடைய விருப்பமெல்லாம் முன்னணிப் படையில் போரிட்டு ஜெர்மானியர்களைப் பழிவாங்க வேண்டும் என்பதுதான்.

அவன் விருப்பத்தை அவர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். திரும்பவும் இரண்டாம் திட்டத்தில் பங்கேற்கிறான். அப்படிப் போகும் அவன் காணாமல் போகிறான். பெர்லினை ரஷ்யப் படைகள் கைப்பற்றிவிடுகின்றன. குடும்பத்தை விஷம் வைத்துக் கொன்றுவிட்டு இட்லர் தற்கொலை செய்துகொள்கிறான். பின்னர் கைப்பற்றப்படும் ஆவணத்தில் இவானின் படத்துடன் அவனைத் தூக்கிலிட்டதற்கான குறிப்பு கிடைக்கிறது.

குயிலின் குரலைக்கேட்டு அதைத் தேடிச் செல்கிறான் இவான். தோட்டத்தில் மரம், செடி, கொடிகளைத் தாண்டி மேலே மேலே எனச் செல்கிறான். இடையில் ஓர் ஆடு முகம் காட்டுகிறது. பிறகு மெல்லத் தாழ்ந்து வருகிறான். வேர்களால் பின்னப்பட்ட ஒரு சுவர். தொலைவில் தண்ணீர் முகர்ந்து செல்லும் அவன் தாய். அவளை நோக்கி ஓடுகிறான். வாளியில் உள்ள தண்ணீரைக் குனிந்து குடித்துவிட்டு மகிழ்ச்சியுடன் சொல்கிறான் “அங்கே ஒரு குயில் கூவிக்கொண்டிருக்கிறது” அப்போது ஒரு வெடிச்சத்தம். திடுக்கிட்டு விழிக்கிறான்.

அவனுக்கு ஆற்றைக் கடந்து உளவு பார்க்கும் பணி காத்திருக் கிறது. அவசரமாக எழுந்து ஓடுகிறான். ஜெர்மன் படைகளின் கடும் பாதுகாப்புக்குள் இருக்கும் அந்த ஆற்றை அவன் கடந்து போகிறான். எறி குண்டுகளும் தோட்டாக்களும் அவ்வப்போது அந்த ஆற்றைப் பதம் பார்த்துக்கொண்டே இருக்கின்றன. பீரங்கிகள் ஆங்காங்கே தாக்கக் காத்திருக்கின்றன.

இவான் இழந்துவிட்ட அற்புத வாழ்க்கையும் இப்போது அவன் வாழ்ந்துகொண்டிருக்கும் இரக்கமற்ற, கொடூரங்கள் நிறைந்த போர்ச் சூழலையும் ஆரம்பத்திலேயே உணர்த்திவிடுகிறார் ஆந்த்ரேய்.

போர் முனையில் தந்தையை இழந்துவிடுகிறான் இவான். ஜெர்மன் படைகளின் அட்டூழியத்துக்குத் தாயும், சகோதரியும் பலியாகிவிடுகின்றனர். இதற்குப் பழிவாங்கும் எண்ணம் ஒன்றே அந்தச் சிறுவன் மனத்தை ஆக்கிரமித்துள்ளது. கோபம் அவனுக்குள் சதா கணமும் பொங்கிப் பிரவகித்துக்கொண்டிருக்கிறது. சிரிப்பும் மகிழ்ச்சியுமாக இருந்த அவன் இப்போது எரிச்சலுக்கும் கோபத்துக் கும் அழுகைக்கும் திடுக்கிடும் கனவுகளுக்கும் இறையாகிக் கிடக்கிறான். இவையே அவனுக்கு வயதுக்கு மீறிய முதிர்ச்சியையும் பொறுப்புணர்வையும் அளித்துவிடுகிறது.

ஆற்றைக் கடந்து வரும் அவனைப் படை வீரன் ஒருவன் முதலுதவி மையத்துக்கு அழைத்து வருகிறான். அதன் பொறுப் பாளனான கால்சேவுக்கு அந்தச் சிறுவன் யாரென்று தெரியவில்லை. “எங்கிருந்து வருகிறாய்?” எனக் கேட்கிறான்.

அதற்கு இவான் “என் பெயர் பன்ந்திரேவ். தலைமை நிலை யத்தைத் தொடர்புகொண்டு பிரிவு 51இல் நான் இங்கிருப்பதாகச் சொல்” என்கிறான்.

கால்சேவ் குழப்பம் அடைகிறான். சேரும் சகதியுமாக உள்ள உடைகளைக் கழற்றச் சொல்கிறான். அவன் முதுகெல்லாம் கீறல்கள்.

“இதெல்லாம் என்ன?” எனக் கேட்கிறான் கால்சேவ்.

இதனால் கோபமடையும் இவான் “தேவையில்லாத கேள்வி களைக் கேட்டுக்கொண்டிருக்காதே. தலைமையகத்தைத் தொடர்பு கொண்டு நான் இங்கிருப்பதாகச் சொல். என்ன செய்ய வேண்டு மென்று அவர்களுக்குத் தெரியும்.”

“எனக்கு நீ உத்தரவு போடாதே. நீ யாரென்று சொல்லும் வரை உன்னைப் பற்றி நான் அவர்களுக்குச் சொல்லப் போவதில்லை.”

“நான் ஆற்றைக் கடந்து வருகிறேன்.”

“அதற்கு என்ன அத்தாட்சி?”

“என்னிடம் கேள்வி கேட்பதை நிறுத்து. இல்லையென்றால் இதெற்கெல்லாம் நீ பதில் சொல்ல வேண்டிவரும்.”

அதன் பிறகு கால்சேவ் தலைமையகத்தைத் தொடர்புகொண்டு அந்தச் சிறுவன் குறித்து தெரிவிக்கிறான். ஆனால் அவர்கள் தவறாகப் புரிந்துகொண்டு அவனை அங்கேயே பிடித்து வைத்திருக்க உத்தரவிடுகிறார்கள்.

இதனால் எரிச்சலடையும் இவான், “நீ பிரிவு 51ஐத் தொடர்பு கொண்டாயா இல்லையா? நானே பேசிக்கொள்கிறேன்” ஒலி வாங்கியை எடுக்க முயல்கிறான். அதற்குச் சம்மதிக்காத கால்சேவ் “சரி தலைமையகத்தில் யாரிடம் பேச வேண்டும்?” எனக் கேட்கிறான்.

அதற்கு இவான் “கேப்டன் கோலின், கர்னல் கிரஸ்னேவ். கர்னலிடம் சொல். நான் இங்கே இருக்கிறேன் என்று. இல்லை என்றால் நானே பேசிக்கொள்கிறேன்.”

பிறகு கால்சேவ் கர்னலைத் தொடர்புகொண்டு பந்த்ரேவ் இங்கே இருப்பதாகச் சொல்கிறான்.

வியப்பும் மகிழ்ச்சியும் அடையும் கர்னல் “தனியாகவா வந்திருக் கிறான். அவனிடம் எதையும் விவாதித்துக்கொண்டிருக்காதே. கோலின் விரைவில் அங்கு வருவார். அதுவரைக்கும் அவனிடம் பக்குவமாக நடந்துகொள். அவனுக்கு வேண்டியதைச் செய்து கொடு. அவன் அதிகக் கோபக்காரன். முதலில் அவனிடம் ஒரு பேப்பரையும் பென்சிலையும் கொடு. அவன் என்ன எழுதித் தருகிறானோ அதை உடனே எனக்கு அனுப்பிவை. புரிகிறதா?”

பிறகுதான் கால்சேவ் இவானின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்கிறான். அவனைக் குளிக்கவைத்து உணவு தருகிறான். அசதி யில் உணவு மேஜையிலேயே தூங்கிவிடும் அவனைத் தூக்கிக் கொண்டு போய்ப் படுக்கையில் கிடத்திப் போர்த்திவிடுகிறான்.

அங்கு வரும் கேப்டன் கோலின் இவானைப் பார்த்ததும் ஓடிவந்து இடுப்பில் தூக்கிவைத்துக்கொள்கிறான். இவானும் அவனை அணைத்துக்கொள்கிறான்.

ராணுவப் பள்ளிக்கு அனுப்பிவைக்கப்போவதாகக் கோலினி டமிருந்து தெரிந்துகொள்ளும் இவான், கோபத்துடன் ஓடிவந்து கர்னலின் சட்டையைப் பிடித்துக்கொண்டு “எதற்காக என்னை ராணுவப் பள்ளிக்கு அனுப்பப் போகிறீர்கள்? அப்படி அனுப்பினால் நான் அங்கிருந்து ஓடிவிடுவேன்” எனக் கோபத்துடன் சொல்கிறான்.

அவர் சொல்கிறார் “போர் உனக்காக நடக்கவில்லை.”

அதற்கு இவான் சொல்கிறான் “லக்காவ், மோரோஸ் இரண்டு பேரும் பெரியவர்களாக இருந்ததால்தான் கொல்லப்பட்டார்கள். என்னால் எங்கே வேண்டுமானாலும் போக முடியும். நான் தனி ஆள். எனக்கென்று யாரும் இல்லை.”

“எல்லாம் முடிவாகிவிட்டது. சொன்னதுபோல நடக்கவில்லை என்றால் தண்டனைதான் கிடைக்கும்.”

“நீங்கள் யார் முடிவுசெய்வதற்கு? நீங்கள் என்ன என்னுடைய அப்பாவா? எனக்கு நான்தான் பாஸ்.”

“நீதான் பாஸா? நீதான் எனக்குப் பிரச்சினை..”

இந்த அளவுக்கு இவானுக்குரிய முக்கியத்துவம் அங்கே பெருகிக் கிடக்கிறது.

கால்சேவ் கோலினிடம் கேட்கிறான் “போர் முடிந்ததும் அந்தச் சிறுவன் என்ன செய்வான்?”

அதற்குக் கோலின் “போர் முடிந்த பிறகு, கர்னல் அல்லது கட்டா சோனச் யாராவது அவனைத் தத்தெடுத்துக்கொள்வார்கள்” என்கிறான். கட்டாசோனச் இன்ஸ்பெக்டர். அந்தக் கிழவனுக்கும் இவான் மீது பிரியம் அதிகம்.

கால்சேவ், முதலில் கடுமையானவன்போலத் தோன்றினாலும் அவனுக்குள் காதலுக்காகவும் கலைக்காகவும் ஏங்கும் மனம் ஒன்று இருக்கிறது. மருத்துவ உதவியாளாக இருக்கும் மாசாவிடம் அவனுக் குள்ள காதலை வெளிப்படுத்த முடியாமல் அவளிடம் அளவுக்கு அதிகமாகக் கடுமையாக நடந்துகொள்கிறான். கேப்டன் கோலின் அந்த இடைவெளியில் நுழைந்து மாசாவைத் தன்வசப்படுத்தி விடுகிறான்.

பீர்ச் மரங்களுக்கிடையே கோலினுக்கும் மாசாவுக்கும் நடக்கும் உரையாடல், கால்வாயைக் கடக்கும்போது அவன் அணைத்து அளிக்கும் முத்தம் எல்லாம் போர்ச் சூழலிலிருந்து அவர்கள் தங்களுக்குள் புதைந்துகிடக்கும் மனித உணர்வுகளை மீட்டெடுக் கும் எத்தனம்தான்.

கோலினின் அழைப்பால் வசீகரிக்கப்பட்டு அவனை அணைத்துக்கொள்ள வரும் மாசாவை, ‘போதும் இங்கிருந்து கிளம்பு’ என அனுப்பி வைத்துவிடுகிறான் கோலின். இதுதான் எல்லை. இங்கு இதற்கு மேல் அனுமதி இல்லை என்பதை உணர்த்திவிடுகிறான்.

பீர்ச் மரங்களுக்கிடையிலான இந்தக் காதல் காட்சி, பாலே நடனம் போல அசைவுகள் கொண்டது. நீளநீளமான வெண் மரங்களுக்கிடையே அசையும் தாபம் நிறைந்த கோலின், மாசா, அவர்களுடையேயான இடைவெளி குறுகி, நீண்டு அலைவுறுகிறது. அவர்களுடைய உரையாடல் கச்சிதமாக இருக்கிறது.

கோலின் கேட்கிறான் “நீ உக்ரைனிலிருந்துதானே வருகிறாய்?”

“எதற்காகக் கேட்கிறீர்கள்?”

“நீ அழகாகவும் அழுத்தமானவளாகவும் இருக்கிறாய்.”

“இல்லை, எங்கள் ஊருக்கு மாஸ்கோவிலிருந்து ரயிலில் 20 நிமிடத்தில் சென்றுவிடலாம்…”

“எங்கள் நகரத்திலிருந்து சைபீரியாவுக்கு 200 மைல். ஓவியன் சுரிகோவ் எங்கள் நகரத்தைச் சேர்ந்தவன்தான். அவனைத் தெரியுமா?”

“எங்கள் ஊருக்கு அருகிலும் நிறைய எழுத்தாளர்கள் இருக்கி றார்கள். ஒருமுறை மரங்களுக்கிடையே நடந்துவரும்போது லியோ டால்ஸ்டாயைப் பார்த்தேன். அவர் ரொம்ப உயரம். சாம்பல் நிற முடி. நாங்கள் மரங்களுக்கிடையே நடந்துபோனோம்.”

இக்காட்சி போர்ச் சூழலுக்கு முரணான, அமைதியான, காதல் நிறைந்த ஒரு வாழ்க்கையை ஞாபகமூட்டுகிறது.

ஆந்த்ரேயின் வேறு எந்தத் திரைப்படத்திலும் இல்லாத காதல் காட்சி இது. காரணம் அவருடைய இந்தத் திரைப்படத்தில் மட்டுந் தான் யதார்த்தமான மனிதர்களை நாம் பார்க்கிறோம். நிஜமான ஒரு வாழ்க்கையைச் சந்திக்கிறோம். ஆந்த்ரேயின் மற்றத் திரைப் படங்கள் எல்லாம் அதீத துயர நாடகம். அங்கே யதார்த்தத்துக்கு இடமில்லை.

இந்தத் திரைப்படத்தில் வரும் முதல் கனவைப் போலவே இன்னும் இரண்டு கனவுக்காட்சிகள் இடம்பெறுகின்றன. உளவு பார்த்துவிட்டுச் சோர்ந்து படுத்திருக்கும் இவானுக்கு மிக அருகில், கூரையிலிருந்து கசியும் நீர் சொட்டிக்கொண்டிருக்கிறது. அந்தச் சப்தம் அவன் பிரக்ஞையில் ஊடுருவிக் கிணறாக மாறுகிறது. அவனும் அவன் தாயும் கிணற்று நீரைப் பார்த்தபடி நட்சத்திரங்களைப் பற்றி உரையாடிக்கொண்டிருக்கிறார்கள். சட்டென்று அவன் கிணற்றுக்கடி யில் உட்கார்ந்து நீரில் தெரியும் சூரியனைப் பிடிக்க முயல்கிறான். அப்போது தண்ணீர் இறைத்துக்கொண்டிருக்கும் வாளி அவன் அம்மாவின் கை நழுவி அவனை நோக்கி வருகிறது. அவன் ‘அம்மா..’ என்று அலறிக் கத்துகிறான். கிணற்றிலிருந்து மேலே வந்து தெறிக்கும் நீர், கீழே கிணற்றடியில் இறந்துகிடக்கும் அவன் அம்மாவின் உடலை நனைக்கிறது. இவான் திடுக்கிட்டு விழித்துக் கொள்கிறான்.

இன்னொரு கனவு, அவனும் அவன் சகோதரியும் ஆப்பிள் ஏற்றிச் செல்லும் லாரியின் மேல் பயணிக்கின்றனர். ஏராளமான ஆப்பிள்கள் லாரியில் நிரம்பியிருக்கின்றன. அதில் சிறந்த ஆப்பிள்களைத் தேர்ந்தெடுத்து அவன் சகோதரியிடம் தர, அவள் எல்லாவற்றையும் வேண்டாமென்று மறுத்துவிடுகிறாள். லாரி சட்டென்று ஓர் ஏரிக்குள் செல்கிறது. ஆப்பிள்கள் கரையில் சரிந்துவிழுகின்றன. அவற்றை அங்கே மேய்ந்துகொண்டிருக்கும் குதிரைகள் உண்ணத் தொடங்கு கின்றன. இக்காட்சி சர்வடர் டாலியின் சர்ரியலிஸ ஓவியங்களை ஞாபகமூட்டுகிறது. குதிரை என்ற படிமம் ஆந்த்ரேயின் ஆந்த்ரே ரூப்ளே, சோலாரிஸ் படங்களிலும் தொடர்ந்து இடம்பெறுகிறது. குதிரை, கம்பீரமும் வலிமையும் ஆச்சர்யமும் ரகசியமும் கொண்ட இயற்கையின் உன்னதக் குறியீடாக மாறுகிறது.

ராணுவப் பள்ளிக்கு அனுப்பப்பட்டுவிடுவோம் என அஞ்சும் இவான் சொல்லாமல் கிளம்பிவிடுகிறான். எல்லோரும் அவனைத் தேடிக்கொண்டிருக்கிருக்கின்றனர்.

வழியில், போரில் தன் மனைவியையும் வீட்டையும் இழந்த கிழவன் ஒருவனை, அந்தச் சிதிலங்களுக்கிடையே சந்திக்கிறான் இவான். வெடிகுண்டால் சிதைந்து போயிருக்கும் அந்த வீட்டின் மரச்சட்டங்கள் கத்தி போல நீட்டி இவானை வரவேற்கின்றன.

கிழவனுக்கு அங்கே மிஞ்சியிருப்பது ஒரு கோழி, கிரீச்சிடும் சத்தத்துடன் காற்றில் சதா அசைந்துகொண்டிருக்கும் ஒரு கதவு மட்டுந்தான். கிழவனின் முகத்தில் துயரமும் பீதியும் உறைந்திருக் கின்றன. பைத்தியம் அவனைப் பீடித்திருக்கிறது. கையில் சட்ட மிடப்பட்ட ஒரு சான்று. அதைச் சுவரில் மாட்ட ஓர் ஆணியை அவன் தேடிக்கொண்டிருக்கிறான். இவானைப் பார்த்ததும் “இங்கேதான் வைத்தேன், எங்கே போனதென்று தெரியவில்லை. நீ வெகு தொலைவுக்குப் போகிறாயா?” எனக் கேட்கிறான்.

இவான் “ஆமாம்” என்கிறான்,

“இப்போது எல்லோருமே வெகுதொலைவுக்குப் போகிறார்கள். ஏன் போகிறார்கள்? யாருக்குத் தெரியும்? நான் ஆணியைத் தொலைத்துவிட்டேன், தேடித் தருவாயா?”

இவான் ஓர் ஆணியைத் தேடி எடுத்துத் தருகிறான். அதை வாங்கிப் பார்க்கும் கிழவன் “நான் தேடிக்கொண்டிருந்தது இதுவல்ல” எனக் கூறி அதைக் கீழே எறிந்துவிடுகிறான்.

“உன்னுடைய அம்மா எங்கே? அவள் இன்னும் உயிரோடுதான் இருக்கிறாளா? ஜெர்மன் படை என்னுடைய மனைவியையும் கொன்றுவிட்டது. கண்ணாடி போட்டிருந்த அந்த உயரமான மனிதன்! அவனுடைய முடி தோள் வரை இருந்தது. என்னுடைய பெலகேயா மீண்டும் வருவாள். அவளுக்காக ஒரு வீட்டை நான் தயாராக வைத்திருக்கிறேன்.”

இடிந்து தரைமட்டமாகிக்கிடக்கும் வீடு, இறந்த தன் மனைவிக் காகக் காத்திருக்கும் கிழவன், நீண்ட கயிற்றால் கட்டப்பட்டு அங்கு மேய்ந்துகொண்டிருக்கும் கோழி. இதெல்லாம் போர் நிகழ்த்தி யிருக்கும் பேரழிவின் சாட்சிகள். இவை இவானை மேலும் துயர முற்றவனாக மாற்றுகின்றன. தன் துயரை மிஞ்சும் ஒரு துயரத்தை அங்கே சந்திக்கிறான்.

அவனைத் தேடிக்கொண்டு வரும் கர்னலுடன் அவன் திரும்பிப் போகும்போது, அந்தக் கிழவனுக்காக ஒரு ரொட்டியை வைத்து விட்டுச் செல்கிறான் இவான்.

இவான் படிப்பதற்கென்று கால்சேவ் சில புத்தகங்களைத் தருகிறான். அவற்றையெல்லாம் தலைமையகத்தில் தங்கியிருந்த போது படித்துவிட்டேன் என்கிறான் இவான். பிறகு கால்சேவ் அவனுடைய பெட்டியில் வைத்திருக்கும் புத்தகத்தைக் காட்டி, “அது என்ன புத்தகம்?” எனக் கேட்கிறான்.

“அது போரின் பேரழிவு குறித்த புத்தகம்.”

“படங்கள் இருக்கின்றனவா?”

“புத்தகம் முழுவதும் படங்கள்தாம். ஸ்பிரிச்சன் கேள்விப்பட்டி ருக்கிறாயா? பிரிட்ஸ் (ஜெர்மானிய அரசன்) போல அவனும் ஒருவன்.”

இவான் அந்த ஓவியங்களைப் பார்த்து உற்சாகமடைகிறான்.

“இவர்களெல்லாம் ஜெர்மானியர்களா?”

“ஆமாம், இதெல்லாம் பழைய கோட்டோவியங்கள்.”

“எலும்பும் தோலுமாக இந்தக் குதிரையில் உட்கார்ந்திருக் கிறானே, இவனைப் போலவே ஒருவனை நான் மோட்டார் சைக்கிளில் பார்த்தேன். இங்கே பார், அவர்கள் மக்களை எப்படிச் சித்திரவதை செய்கிறார்கள்!”

“இது கற்பனைதான்.”

“கற்பனை! ஆனால் அவர்களை எனக்குத் தெரியும்.”

ஓவியத்தில் உள்ள இன்னொருவனைக் காட்டி “இவனும் பிரிட்ஸ் தானா?”

“இல்லை. இவன் ஜெர்மன் மருத்துவனாகவோ எழுத்தாள னாகவோ இருக்கலாம்.”

“அவர்களிடம் எழுத்தாளர்களே இல்லை. சதுக்கத்தில் வைத்து அவர்கள் புத்தகங்களை எரித்ததை நான் பார்த்தேன். மண்ணெண் ணெயைப் புத்தகங்களின் மீது ஊற்றி அவற்றை எரித்தார்கள் அவர்கள்.”

“இவன் 400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஓர் எழுத்தாளன்.”

“ஒருவேளை இருக்கலாம்…”

இப்படியாக ஜெர்மானியர்கள் என்றால் கொடுமைக்காரர்கள், இரக்கமற்றவர்கள் என்ற எண்ணம் இவான் மனத்தில் ஊறிக் கிடக்கிறது. இதற்குப் பழிதீர்க்கவே இரண்டாவது திட்டத்திலும் பிடிவாதத்துடன் பங்கேற்கிறான்.

அவனை அதிகம் நிலைகுலையச் செய்வது தாயின் இறப்புதான். அந்த அரவணைப்பை, கதகதப்பை, அன்பை அவன் இழந்து விட்டான். போர் இந்த அநீதியை அவனுக்கு இழைத்துவிடுகிறது.

போருக்கு முதல் பலி குடும்பங்கள்தான். ஒவ்வொரு இறப்பு நேரும்போதும் ஒரு குடும்பம் சிதைகிறது. நிலைகுலைகிறது. போர் குடும்பங்களின் மீது மீட்டெடுக்க முடியாத துயரத்தைக் கொண்டு வந்து கவிழ்க்கிறது. பல குடும்பங்களை இல்லாமல் ஆக்குகிறது. நாசிஸம் ஓர் இனத்தையே அழிக்க நினைத்தது.

இவானின் குழந்தைப் பருவம் பன்னிரெண்டு வயது சிறுவனின் ஆன்மாவில் போர் என்ற ராட்சதன் வரைந்த ஒரு காயத்தின் சித்திரம்.

ரஷ்யாவின் வெற்றியைக் கொண்டாடவோ இட்லரின் நாசிஸம் முடிவுக்கு வந்ததை வரவேற்கவோ இல்லாமல், போரின் கொடூரத்தை உணர்த்தவே தார்க்கோவஸ்கி விரும்பியிருக்கிறார்.

பழிவாங்கும் எண்ணம் வளர்ந்த மனிதனுக்கு வருவது இயல்பு. ஆனால் அது பன்னிரெண்டு வயது சிறுவனுக்கு ஏற்படுவதும், அதற்காக அவன் தன் உயிரையே தியாகம் செய்வதும் வரலாற்றின் துயரம். இதுவும் ஒரு விதமான தற்கொலையே. சிறுவன் ஒருவனைத் தற்கொலைக்கு நிர்ப்பந்திக்கிறது என்றால் அது எப்படிப்பட்ட சமூகமாக இருக்க முடியும்? இவானின் இந்தத் துயர முடிவுக்கு அவன் குடும்பத்தை அழித்த ஜெர்மன் படைகள் மட்டும் காரணமல்ல, ரஷ்யாவும்தான். இந்த இரண்டு நாடுகள் மட்டுமல்ல போரை நிர்ப்பந்திக்கிற, வரவேற்கிற, ஏற்றுக்கொள்கிற, தூண்டுகிற, உதவுகிற எல்லா நாடுகளும், இனக்குழுக்களும், மத நிறுவனங்களும், மனித மனங்களும்தான்.

ஒரு சிறந்த கலைஞனைக் கட்டமைப்பதில் அவனுடைய குழந்தைப் பருவம் முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதை இங்கே சொல்லியாக வேண்டும். பன்னிரெண்டு பதின்மூன்று வயது வரையிலான அவனுடைய வெகுளித்தனமான அனுபவங்கள்தான் வாழ்க்கை என்ன என்பதை அவனுக்குக் கற்றுத்தருகிறது. ஏராளமான கனவுப் படிமங்களைத் தனக்குள் ஏராளமாக உருவாக்கி வைத்துக் கொள்கிறது. வாழ்நாள் முழுவதும் அவை அவனுக்குள் பொங்கி பிரவகித்துக்கொண்டே இருக்கிறது. மிரர் படத்தில் நோய்வாய்ப்பட்டுப் படுத்திருக்கும் கதாநாயகன் தனது குழந்தைப் பருவம் குறித்த நினைவுகளை அசைபோட்டபடி இருக்கிறான். அவைதான் இன்னும் அவன் வாழ்வதற்கான அர்த்தத்தையும் மகிழ்ச்சியையும் தருகின்றன.

இவானின் குழந்தைப் பருவம் படத்தில் இடம்பெறும் கனவுகள் குறித்துத் தனது காலத்தைச் செதுக்குதல் புத்தகத்தில் பிரதானப் படுத்தி எழுதுகிறார் தார்க்கோவஸ்கி. கனவு தனக்குள் வைத்துள்ள கவிதைத்தன்மையைப் படத்தில் கொண்டுவர மேற்கொண்ட முயற்சிகளை விளக்குகிறார்.

தார்க்கோவஸ்கியின் படங்களில் குறிப்பாக மிரர், சோலாரிஸ் படங்களில் குழந்தைப் பருவம் குறித்த கனவுகள்  இடம்பெறுவதை இங்குக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். இவானின் குழந்தைப் பருவம் படத்தில் வரும் முதல் கனவில் “அங்கே ஒரு குயில் கூவிக்கொண்டிருக்கிறது” என அவன் தன் அம்மாவிடம் சொல்லும் காட்சி தனது அனுபவம்தான் என்கிறார் தார்க்கோவஸ்கி.

போர்ச் சூழலைப் பின்னணியாகக் கொண்ட இப்படத்தைப் பார்த்துவிட்டு வந்த எல்லாரும் சொன்னது அந்தக் கனவுக் காட்சி களைப் பற்றித்தான். அவைதான் அவருடைய தனித்தன்மையை, மேதமையை எடுத்துக்காட்டியது.

டி.எஸ்.எலியட் படைப்பாளியைப் பண்பட்ட ஊடகம் எனச் சொல்வதுபோல, தார்க்கோவஸ்கியோ முக்கோணப் பட்டகம் என்கிறார். அதன் வழியாக ஊடுறுவும் ஒளி, பல்வேறு வண்ணங் களாகப் பிரிவது போல வாழ்க்கைச் சம்பவங்கள் அவனுக்குள் பல்வேறு விதமாக ரூபம் கொள்கின்றன. அந்த ரூபங்கள்தான் அவனுடைய படைப்புகள். அந்த நிகழ்வு குறித்துத்தான், தனது அடுத்த படமான ஆந்த்ரே ரூப்ளேவில் அவர் ஆராய்ந்தார்.

இவானின் குழந்தைப் பருவம் தந்த அனுபவமும் பார்வையும் தான் ஆந்த்ரே ரூப்ளே படத்துக்கான அஸ்திவாரமாக இருந்துள்ளது.

 

 

 

டான் குயிக்ஸாட்

%e0%ae%9f%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-1

டால்ஸ்டாயின் போரும் வாழ்வும், தாஸ்தாவஸ்கியின் கரமச்சோவ் சகோதரர்கள் எல்லாம் படிக்கும் போது 100 ஆண்டுகளுக்கு முன்பே இது போல எழுதியிருக்கிறார்களே என வியந்ததுண்டு. அதே போல பால்ஸாக்கின் கதைகளை வாசித்த போது 200 ஆண்டுகளுக்கு முன் இவ்வளவு நுட்பமாகவும் உளவியல் தன்மையுடனும் எழுதியிருக்கிருக்கிறாரே என ஆச்சர்யப்பட்டிருக்கிறேன். ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த மிகுவல் டீ செர்வான்டீஸின் டான் குயிக்ஸாட் நாவலின் முதல் பகுதி 1605- திலும் இரண்டாம் பகுதி 1615-திலும் வெளிவந்திருக்கிறது. இதெல்லம் நடந்தது 400 ஆண்டுகளுக்கு முன். அதுவும் அந்தக் காலத்திலேயே ஒரு நவீன செவ்வியல் நாவல். பெரிய வியப்பு இது.

கதைக் களமும், சதா அதில் இழையோடும் நகைச்சுவையும், காதலும், மர்மமும், சாகசமும், இலக்கியம், தத்துவம், அரசமைப்பு, சட்டங்கள் குறித்த ஆழ்ந்த புரிதல் இதெல்லாம் நம்மை வியக்க வைக்கிறது. முக்கியமாக அதன் நவீன கதை சொல்லல் முறைதான் நம்மை வசீகரித்துவிடுகிறது.

பரிதாபத் தோற்றம் கொண்ட, மத்திய வயதைக் கடந்த, வீரசாகசக் கதைகளைப் படித்து அரைக்கிறுக்கனாக மாறிப்போன டீ லா மன்ச்சாவின் டான் குயிக்ஸாட்டும், அவன் உதவியாளனும், சதா பழமொழிகளை உதிர்க்கும் குடும்பந்தஸ்தனுமான சான்க்கோ பான்ஸாவும் வீரச் செயல்கள் புரிய மேய்ச்சல் வெளியில் பயணிக்கிறார்கள்.

முதல் பயணம் (முதல் பகுதி) முடிந்து இரண்டாம் பயணம் தொடங்கும் போது சிட் ஹேமட்டி பெனென்கெலி என்பவர் அரபு மொழியில் எழுதிய டான் குயிக்ஸாட்டின் வரலாறு ஸ்பானிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு வெளி வந்துவிடுகிறது. அதே போல இரண்டாவது பயணம் முடிவதற்குள்ளாகவே டான் குயிக்ஸாட் வரலாற்றின் இரண்டாம் பகுதி டார்டிசில்லாஸ் என்வரால் எழுதப்பட்டு வெளி வந்துவிடுகிறது. மேலும் அந்த வரலாற்றில் டான் குயிக்ஸாட்டைப் பற்றியும் சான்க்கோ பான்ஸா பற்றியும் தவறாக எழுதப்பட்டுள்ளது. இதனால் மன வருத்தம் அடைகிறான் டான் குயிக்ஸாட். அதனால் அதில் எழுதப்பட்டுள்ளது போல சார்க்கோஸா நகருக்குச் செல்லாமல் அதை பொய்யாக்கும் விதமாக பார்ஸிலோனாவுக்கு செல்கிறான். மேலும் அந்த வரலாற்றில் சொல்லப்படும் பாத்திரத்தைக் கொண்டு அது வேறு டான் குயிக்ஸாட் என அறிவிக்கச் சொல்கிறான்.

நாவலின் முதல் பகுதி குறித்த விமர்சனம், அதில் உள்ள குறைகள் இரண்டாம் பகுதியில் சுட்டிக்காட்டப்படுகிறது. இது செர்வான்டிஸ் எழுதிய நாவலாக இல்லாமல் டான் குயிக்ஸாட் என்கிற நிஜ பாத்திரத்தைப் பற்றி பெனென்கெலி எழுதிய வரலாற்றின் மொழி பெயர்ப்பு நூலாகவே நாவல் முழுவதும் குறிப்பிடப்படுகிறது.

டான் குயிக்ஸாட் என்ற பிரதானப் பாத்திரம் ஒரு பைத்தியக்காரனைப் சித்திரிக்கப்பட்டிருந்தாலும் அவன் கடைபிடிக்கும் ஒழுக்கம் நேர்மை அவனிடம் வெளிப்படும் அற உணர்வு, இறுதியான அவன் மரணம் அவனை ஒரு காவியப் பாத்திரமாக்கிவிடுகிறது. அதற்கு ஈடானதுதான் சான்க்கோ பான்ஸாவின் பாத்திரமும். அவன் ஒரு பெருந்தீனிக்காரன், பொய்யன், கோழை என்றாலும் அவனை நுட்பமான அறிவு கொண்டவனாக, மற்றவர்களை மகிழ்விக்கும் கோமாளியாக படைத்திருக்கும் விதம் டான் குயிக்ஸாட்டு இணையான காவியப் பாத்திரமாக மாற்றிவிடுகிறது. ஒரு நீண்ட நாடகத்தின் ஒரு பகுதியாக ஒரு தீவின் ஆளுநராக அவன் நியமிக்கப்பட்டவுடன் அவனது பாத்திரம் மேன்மை கொண்டுவிடுகிறது.

cervantes-03

இது வாசகர்களுக்கான நாவலாக மட்டும் இல்லாமல் எழுத்தாளர்களுக்கான நாவலாக இருப்பதுதான் சிறப்பு. மனப்பூர்வமாக சொல்வதென்றால் தமிழில் மட்டுமல்ல உலக இலக்கியங்களிலேயே இதற்கு ஈடான ஒரு நாவல் இன்னும் எழுதப்படவில்லை என்றே சொல்லலாம். தமிழ் நாவல் இலக்கியம் தொடங்கி 100 ஆண்டுகளை கடந்தும் டான் குயிக்ஸாட்டை ஒப்பிடும் போதும் இன்னும் ஆரம்ப நிலையிலேயே இருப்பதாகவேத் தோன்றுகிறது. காரணம் இது போன்ற நாவல்களைப் படைக்க உலகு தழுவியப் பார்வை, பரந்துபட்ட அறிவு, செவ்வியல் மற்றும் நவீன காலப் படைப்புகளை ஆழ்ந்து கற்றல், பாரபட்சமற்ற ஒரு விமர்சனப் பார்வை, ஹாஸ்ய உணர்வு, உளவியல் அறிவு, கருணை மனம், அற உணர்வு, பல்மொழிப் புலமை, கற்பனை வளம், சமூக அவலங்கள் மீதான கோபம், அரசும், சட்டமும், மதங்களும் தனிமனிதன் மீது செலுத்தும் ஆதிக்கம் பற்றிய புரிதல், அதன் அபத்த செயல்பாடுகளை சுட்டிக்காட்டும் துணிச்சல் என பல தகுதிகள் உள்ள படைப்பாளியால் மட்டுமே இது சாத்தியம்.

இதை தமிழில் சிறப்பாக மொழிபெயர்த்துள்ள சிவ.முருகேசன், நேர்த்தியாக வெளியிட்டுள்ள சந்தியா பதிப்பகத்தாரை அவசியம் பாராட்டியாக வேண்டும். முதல் பகுதி 552 பக்கம், இரண்டாம் பகுதி 656 பக்கம். மொத்த விலை 850 ரூபாய்.

இருவர்

 

உப தலைப்பு: தமிழினத் தலைவரும், கொடுத்து சிவந்த கரமும்

உள்ளார்ந்த தலைப்பு: சீரழிவின் பிதாமகன்கள்

 

சில நாட்களுக்கு முன் ‘கருணாநிதி சாலையில்’ என்ற தலைப்பில் ஒரு பதிவை போட்டிருந்தேன். அதன் தொடர்ச்சியாக யோசிக்கையில் இன்றைய தமிழகத்தின் சீரழிவுக்கு கருணாநிதிக்கு எவ்வளவு பங்கு இருக்கிறதோ அதே அளவு பங்கு எம்.ஜி.ஆர் என்கிற எம்.ஜி.ராமச்சந்திரனுக்கும் இருக்கிறது என்பது புலப்பட்டது. முதலாமவர் தமிழகத்தில் திருடர்களை உருவாக்கினார் என்றால் எம்.ஜி.ஆர்.முட்டாள்களை உருவாக்கியிருக்கிறார்.

என் அப்பா தீவிர திமுக தொண்டர். ஆனால் சிறு வயதிலிருந்தே நான் எம்.ஜி.ஆர். ரசிகனாக மட்டமல்ல வெறியனாக இருந்திருக்கிறேன். என் சட்டையில் பிளாஸ்டிக்கால் ஆன இரட்டை இலையை அணிந்து கொண்டு வாக்கு சேகரித்திருக்கிறேன். தோப்பில் தனித்து இருக்கும் என் வீட்டு சுவரில் அதிமுக போஸ்டர்களை ஒட்டியிருக்கிறேன். எம்.ஜி.ஆர். சாகும் வரை அவர் மீதான இந்த பற்றுதல் என்னிடம் குறையவே இல்லை.

86-க்குப் பிறகு – என் சிந்தனையில் மாற்றம் வந்த பிறகு – அதெல்லாம் எவ்வளவு முட்டாள்தனம் எனத் தோன்றத் தொடங்கியது. ஆனால் இந்த இரு கட்சிகளையும் அதன் தலைவர்களையும், தொண்டர்களையும் அவர்களின் மனப்போக்கையும் புரிந்துகொள்ள இது துணையாக இருந்தது, இருக்கிறது.

இதை திராவிட அரசியல் என்ற வார்த்தையால் குறுக்க தயக்கமாக இருக்கிறது. அதை உருவாக்கிய பெரியாரோ, அண்ணாவோ இவர்களைப் போன்ற பிழைப்புவாதிகள் இல்லை. அது உணர்வுப் பூர்வமானது மட்டுமல்ல அறிவுப்பூர்வமானது. வரலாற்றுக்கு அவசியமானது. இன்றுவரை தமிழகம் தேசிய நீரோட்டத்திலிருந்து தனித்துப் பயணிப்பதற்கு அவர்கள்தான் காரணம். உயர் ஜாதி மேலாண்மையை முன்னிருத்தும் இந்து மத அடிப்படை வாதத்தை ஆதாரமாகக் கொண்ட ஆர்.எஸ்.எஸ். வழி வந்த பாஜகவுக்கு  இடம் கொடுக்காமல் இருப்பதற்கு அவர்கள் உருவாக்கிய அடித்தளம்தான் காரணம். தமிழகர்களின் மனதில் இந்த உணர்வு இன்றும் நிலைத்து நிற்பது அவர்களால்தானே அல்லாது அதற்குப் பின் வந்த கருணாநிதியோ, எம்.ஜி.ஆரோ, ஜெயலலிதா காரணம் அல்ல. அந்த அடிப்படை உணர்வை சிதைத்து இவர்கள் நடத்திய அரசியல் நாடகத்துக்குப் பிறகும் அந்த அடித்தளம் உறுதியாக இருப்பதாகவே நம்புகிறேன்.

சனிக்கிழமை சட்டப்பேரவையில் நடந்த கூத்து தெளிவாக ஒன்றை புலப்படத்தியிருக்கிறது. மக்கள் பிரதிநிதிகள் என்று சொல்லப்படுகிற இவர்கள் எவ்வளவு கீழ்த்தரமானவர்களாக உருவாகி வந்திருக்கிறார்கள் என்பதுதான் அது. அதிமுக, திமுக உறுப்பினர்கள் அனைவருமே இதில் சமமானவர்கள்தான்.

மன்னார்குடி கும்பலின் பிரதிநிதியான எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சி அமைந்துவிடக்கூடாது என்று தமிழக மக்கள் எல்லோருமே விரும்பினார்கள் என்றாலும் திமுக அதை சட்டப்பேரவையில் முன்னெடுத்தாலும் அவர்கள் நோக்கம் வேறு என்பது மட்டுமே உண்மை. திமுக உறுப்பினர் சபாநாயகரின் இருக்கையில் அமர்ந்தது ஏதோ அத்துமீறல் சம்பவம் என்று தோன்றினாலும் தாங்கள் ஆட்சி அதிகாரத்தில் அமர்வதற்கான வாய்ப்பு சமீபித்துவிட்ட நிலையில் அது விலகிப்போகிறதே என்ற ஆத்திரமும் ஒரு காரணம். சட்டப்பேரவையில் ஜெயலலிதா நடத்தியது போன்ற ஒரு நாடகத்தைதான் ஸ்டாலினும் நிகழ்த்தியிருக்கிறார் என்பது வெளிப்படை.

ஆட்சி நிர்வாகம் என்று வரும்போது அதிமுகவைவிட திமுக நம்பிக்கை தட்டுகிறது என்றாலும் அக்கட்சியின் அடிமட்டம் வரை அவர்கள் நிகழ்த்தும் அட்டூழியம் தமிழகம் அறிந்துதான். ஊழலை சகஜமாக்கியது அவர்கள்தான் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. அதே போல சுயமரியாதை இல்லாத, தனித்திறன் இல்லாத, மக்குப் பேர்வழிகளை எம்எல்ஏக்களாக்கி ஒரு அடிமை மனப்பாண்மையை உருவாக்கியதில் எம்ஜிஆரின் பங்கு மிக முக்கியமானது. இரட்டை இலையில் ஒரு கழுதையை நிற்க வைத்தாலும் வெற்றி பெறலாம் என்ற எண்ணத்தை உருவாக்கியவர் அவர்தான். அதன் தொடர்ச்சியால் விளைந்தவர்கள்தான் இன்றைய அதிமுக எம்எல்ஏக்கள்.

மக்களின் மனப்போக்குக்கு எதிராக பதவிக்காக, பணத்துக்காக, சுகபோகத்துக்காக மக்கள் விரோதிகளாகப் போய் ஒரு விடுதியில் அடைந்துகிடக்கிறார்கள் என்றால் இந்த கேவலத்துக்கு வழி வகுத்தவர் எம்ஜிஆர்தான். அதை ஜெயலலிதாவும், அதற்கு பின் சசிகலா கும்பலும் இதைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.

பணத்தைக் கொண்டும், காவல் துறையைக் கொண்டும் அப்பல்லோ மர்ம நாடகத்தை வெற்றிகரமாக நடத்தி விட்டத் தெம்பின் தொடர்ச்சிதான் கோல்டன் பே ரிசார்ட் நாடகம் மற்றும் சட்டப்பேரவை நிகழ்வுகள். தொலைக்காட்சிகளுக்கோ பத்திரிகைகளுக்கோ அனுமதி மறுக்கப்பட்ட போது ஜெயா டீவி மட்டும் எப்படி உள்ளே நுழைகிறது? அது என்ன அவர்கள் கட்சி அலுவலகமா போயாஸ் கார்டனா? எவ்வளவு துணிவுடன் அதை அவர்கள் செய்கிறார்கள்! எவ்வளவு காவலர்கள் கொண்டு வந்து நிறுத்தப்படுகிறார்கள். அப்பல்லோவுக்கு முன்னும், ரிசார்ட்டுக்கு முன்னும் நின்ற காவல் துறைதான் சட்டப்பேரவையிலும் நிற்கிறது. அது அந்த கும்பலின் ஏவல் துறை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

தீர்ப்பு தனக்கு எதிராக வரும் என்று தெரிந்தும் இடைப்பட்ட அந்த நான்கைந்து நாட்களில் தான் முதல்வர் பதவியில் அமர்ந்துவிட வேண்டும் என சசிகலா துடிக்கிறார். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளாமல் விட்டால் பிறகு பத்து ஆண்டுகளுக்கு அது தள்ளிப்போகும். சாதாரண ஒரு பிரஜையாக சிறைக்கு சென்றால் அங்கு வசதி வாய்ப்பு குறையும், முதல்வராக இருந்துவிட்டு சென்றால் அதற்குரிய சலுகைகள் கிடைக்கும். சசிகலாவைத் தவிர்த்து அந்த குடும்பத்தில் யாரும் உடனே முதல்வராவதற்கான இடம் இல்லை. அதனால் இந்த நான்கைந்து நாட்களில் கட்சி தனதுதான் என்பதை உறுதிப்படுத்திவிட்டுச் செல்ல வேண்டும். இப்படி எத்தனையோ கணக்குகள் அதற்கு பின்னால் இருக்கிறது. அந்த கோபம்தான் ஜெயலலிதா சமாதிக்கு முன் அவரிடம் வெளிப்பட்டது. தெரிந்தோ தெரியாமலோ ஆளுநர் அந்த வாய்ப்பை அவருக்கு தராமல் போய்விட்டார்.

தாங்கள் அனுப்பிய பிரதிநிதிகள்தான் ஆட்சி அமைக்கப் போகிறார்கள் என்று தெரிந்தும் மக்கள் ஏன் அவர்கள் ஆட்சியை ஏற்கத் தயங்குகிறார்கள்? ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தல் நடத்தக் கோருகிறார்கள்?

உண்மையில் இந்த எம்எல்ஏக்கள் யார் என்றே மக்களுக்குத் தெரியாது, அவர்கள் வாக்களித்தது இவர்களுக்கல்ல. எம்ஜிஆருக்காக, இரட்டை இலைக்காக, ஜெயலலிதாவுக்காக. அந்த இடத்தை ஒரு கொள்ளை கும்பல் வந்து நிரப்புவதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்த விளையாட்டில் தாங்கள் முட்டாளாக்கப் படுகிறோம் என்பதுதான் மக்களின் கோபத்துக்குக் காரணம். முட்டாளாக்கியது இவர்கள் அல்ல எம்ஜிஆர்தான். அவர் தன்னை சுற்றி உருவாக்கிய பிம்பம்தான். தியாகத்தின் திருஉருவமாக, வள்ளலாக, தூய்மையானவராக, ஏழைகளின் தோழனாக திரையில் உருவாக்கிக்காட்டிய காட்சிகள்தான் அவர் மீதான இந்த மோகத்துக்குக் காரணம். இதையெல்லாம் மக்கள் நம்புகிறார்கள் என்று தெரிந்துவிட்டதால் அந்த நாடகத்தை அவர் நடத்தினார். அதில் வெற்றியும் பெற்றார். அந்த முட்டாள்தானம்தான் தமிழ அரசியலை இந்த சீரழிந்த நிலைக்கு தள்ளியிருக்கிறது.

 

broken-mirror-daniel-janda